Sunday, February 7, 2010

பாயசம்...

பாயாசம் ...

இந்தப் பாயாசம் இருக்கே பாயாசம் ...இது எனக்கு ரொம்ப நாளாவே பிடிக்காத ஒரு பட்சணமா தான் இருந்தது,

இதை பானம்னு சொல்றதா பட்சணம்ன்னு சொல்றதாங்கற குழப்பம் வேற!

அந்தக் காலத்தில வீட்டுக்கு குறைஞ்சது மூணு பிள்ளைங்க கணக்குல நாடு இருக்கைல அத்தை பிள்ளை,சித்தி பிள்ளைகள் என்று விடுமுறை நாட்களில் வீடே அமளி துமளிப் படும் போது ஏதாவது விசேஷங்கள் தவிர சும்மா இருக்கற நேரம்லாம் பாயாசம் வச்சு சாப்பிடற வழக்கம் இல்லை,அதான் கார்த்திகை விரதம்,ஏகாதசி விரதம்,இப்படி சில விரத நாட்களை ஸ்பெசலாக பாட்டி ஞாபகம் வைத்துக் கொள்வார்.அன்றைக்கு விரதத்தில் நிச்சயம் பாயாசம் உண்டு.பாயாசம் இல்லாமல் விரதமாவது ஒன்னாவது,பாயசம் இல்லைன்னா அது விரதமே இல்லைன்னு கையில அடிச்சு சத்யம் பண்ற அளவுக்கு சின்னப் பிள்ளைங்க நாங்களாம் அந்தப் பாயாசத்தின் பேர்ல அத்தனை பிரியமாவும் அவ்ளோ தெளிவாவும் இருந்தோம் அப்போ:)))

பொதுவா பாயசம்னா என்னலாம் சேர்ப்பாங்க அதுல ;பால்,சேமியா,ஜவ்வரிசி,முந்திரிப் பருப்பு,ஏலக்காய்,கிஸ் முஸ் பழம்(உலர் திராட்சை) போதாக்குறைக்கு கடைசியா தேங்காய் துருவல் கொஞ்சம் போட்டு இறக்கி பரிமாறுவாங்க.இது ஒரு வகைப் பாயாசம்.

இன்னொரு வகை பருப்புப் பாயசம் ,இதை எப்படி செய்வாங்கனா...பாசிப்பருப்புல வெல்லம் சேர்த்து வேக வைத்து ஏலக்காய் ,காய்ஞ்ச திராட்சை ,முந்திரிப்பருப்பெல்லாம் வழக்கம் போலவே போட்டு அடுப்பை அணைக்க முன்னாடி சிறு தீயில தேங்காய் துருவல் போட்டு இறக்கிப் பரிமாறுவாங்க,இதுக்குப் பேர் தான் பருப்புப் பாயசம்.

இதெல்லாம் விட இன்னொரு வகை என்னை மாதிரி சிலருக்கு சேமியா போட்ட பாயசம் பிடிக்கலைனா சேமியா இல்லாம வெறும் ஜவ்வரிசிய வேக வச்சு பாலலை சுண்டக் காய்ச்சி அதுல இதைக் கலந்து வழக்கம் போல முந்திரி,காய்ஞ்ச திராட்சை,ஏலக்காய் போட்டு இறக்கலாம்,இதுக்குப் பேர் தான் பால் பாயாசம்.இதுல தேங்காய் எல்லாம் போடத் தேவை இல்லை,சிலருக்கு தேங்காய் போட்டா பிடிக்கவும் பிடிக்காது.

இதை தவிர இன்னொரு வகை பாயசம் ,பச்சரிசி மாவை தண்ணி விட்டுப் பிசைஞ்சு குட்டி குட்டி உருண்டையா வெந்நீர்ல போட்டு வேக வச்சு எடுத்து அதை பால்ல கலந்து ஏலக்காய் எல்லாம் போட்டு ஒரு வகை பாயசம் பண்ணுவாங்க,இதுக்கு தெலுங்குல உண்டராலு பாயசம்னு பேர்.கடும் சளித் தொந்திரவு இருந்தா இப்படி செஞ்சு கொடுப்பாங்க,

இதெல்லாத்தையும் விட ஐயப்பன் கோயில்கள்ல நம்ம தமிழ் நாட்டு சர்க்கரைப் பொங்கல் மாதிரியே இருக்கற ஒரு பட்சணத்தை பாயசம்னு பிரசாதமா தராங்க ,அபார ருசி ஆனா ஒரு அளவுக்கு மீறி சாப்பிட முடியாது.திகட்டும் ,இதே போல கேரளா ரெஸ்ட்டாரென்ட்ஸ் எங்கலாம் இருக்கோ அங்கலாம் சக்கப் பழப் பாயசம்ன்னு ஒரு வகைப் பாயசம் கிடைக்கும்,பலாப் பழத்துல பண்ணுவாங்களாம்,இதுவும் பயங்கரத் திகட்டல் தான்,ஆனா டேஸ்ட்டா இருக்கு.

இவ்ளோ தான் எனக்குத் தெரிஞ்ச பாயசங்கள்.

இதை தவிர இன்னொரு பாயசம் எனக்குத் தெரியும்னா ...அது தி.ஜானகிராமன் எழுதின "பாயசம்" சிறுகதை தான் ,இன்பாக்ட் நான் இந்த பதிவு எழுதறதுக்கே அவரோட அந்த சிறுகதை தான் காரணம்னும் சொல்லலாம். அருமையான சிறுகதை ,தி.ஜா சிறுகதை தொகுப்பு கிடைச்சா நீங்களும் படிங்க.

6 comments:

  1. குடிக்கிற பாயசமும், படிக்கிற பாயசமுமா ரெண்டு பாயசம் வச்சிருக்கீங்க...

    ReplyDelete
  2. பாயசத்தைப்பற்றி கலக்கீட்டிங்க....

    ReplyDelete
  3. பருப்பு பாயாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    ஐயப்பன் கோவில்ல தர்றது அக்கார வடிசல் மாதிரி இருக்கும். ஆமா, அக்காரவடிசலை எப்படி விட்டீங்க? :))

    ReplyDelete
  4. பழைய இடுகை எல்லாம் எங்க? :((

    ReplyDelete